விருகம்பாக்கத்தில் திரைப்பட கதாநாயகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஜெசிகாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால், அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது, ஜெசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து ஜெசிகாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்றிரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை ஜெசிகா, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

அந்த கடிதத்தில் ’ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன்… ஆனால் காதல் கைக்கூடவில்லை… அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்… என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.