அக்.18ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை (அக்.18) அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு பின் அக்டோபர் 20ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிக கனமழையும், கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.