முல்லைப்பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில்,
இரண்டு மாத இடைவெளிக்குப் பின், பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மின் நிலையத்தில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களில் இரண்டாவது ஜெனரேட்டர் இயக்கப்பட்டு தினசரி 23 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த் திறப்பு விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் கடந்த மார்ச் 31ம் தேதி பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அணையில் இருந்து விநாடிக்கு 250 கன அடிக்கும் மேல் நீர்த்திறப்பு இருந்தால்தான் மின் உற்பத்தி செய்ய முடியும். தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு விநாடிக்கு 200 கன அடியில் இருந்து விநாடிக்கு 256 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. கடந்த 2022 மார்ச் துவங்கி 23ம் ஆண்டு மார்ச் இறுதி வரை 663 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 116 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.