நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டார்.. ஆனால் வழக்கம் போல் உயர்கல்வித்துறை அமைச்சர் இதில் கலந்து கொள்ளவில்லை..
சுமார் 37,000 பேர் பட்டம் பெற தகுதியான நிலையில் சுமார் 759 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.. இந்த பட்டமளிப்பு விழாவில் ஜீனு ஜோசப் என்ற பி.ஹெச்.டி மாணவி ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து, அவரை கடந்து சென்று அவர் அருகில் இருந்த துணை வேந்தர் சந்திர சேகரிடம் பட்டம் பெற்றார்..
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதால் ஆளுநரிடம் பட்டம் வாங்க விருப்பமில்லை என்று ஜீனு ஜோசப் கூறியிருந்தார்.. அவரின் இந்த செயல் பேசு பொருளாக மாறியது..
இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து திமுகவை விமர்சித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?” என்று குறிப்பிட்டுள்ளார்.