மதுரை மாவட்டம் புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் வசித்து வந்த வங்கி அதிகாரி வடிவேல் என்பவரது மகன் யுவன் (15). இவர், மேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றவர். மேலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக யுவன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இந்நிலையில், சமீபத்தில் யுவனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் நேற்று அவரது பெற்றோர் கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில், யுவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், விபரீத முடிவு எடுத்த யுவன், தான் போட்டிகளுக்குப் பயன்படுத்திய ஏர்கன் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இரவில் வீடு திரும்பிய பெற்றோர், மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புதூர் காவல்துறையினர், யுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யுவனின் தற்கொலைக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே தேசிய அளவில் சாதிக்கத் தயாராக இருந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது



