தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில், மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலு நாச்சியார் என பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் மேம்பாலம் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
மதுரை தொண்டி சாலை அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச்சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது. இந்த சாலை மதுரை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை ஆகும்.. இந்த சாலையில் அதிகமான கல்வி நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ளன..
மேலும் போக்குவரத்து செறிவு அதிகமாக உள்ள காரணத்தினால் இப்பகுதியில் 3 சந்திப்புகளிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிவவி வந்தது.. மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையிலும் நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் வகையிலும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தால் மதுரை தொண்டி சாலை கோரிப்பாளையம் முதல் சுற்றுச்சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்..
950 மீட்டர் நீளமுள்ள இந்த முக்கியமான மேம்பாலத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டு சிறப்பான ஆட்சி புரிந்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : “திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் தவறில்லை..” நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்து..



