உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம், நாட்டையே பாதித்தது. ஆனால் அதைவிட வேதனையை அளிப்பது, அந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாதது என்ற செய்திதான்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜனவரி 29 ஆம் தேதி கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மனைவி உயிரிழந்த நிலையில் மாநில அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி உதய் பிரதாப் சிங் என்பவர் தாக்கல் செய்த மனு அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங், சந்தீப் ஜெயின் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறியதுடன், பிரேத பரிசோதனை செய்யாமல் இறந்தவரின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணையுடனும் கண்ணியத்துடனும் இழப்பீடு வழங்குவது அரசின் கடமை. அரசுதான் மக்களின் பாதுகாவலர். உயிரைப் பாதுகாப்பதற்கும் இழப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் அரசு கடமைப்பட்டுள்ளது.
கும்பமேளாவில் முழு அதிகாரமும் அரசிடம்தான் இருந்தது. இறந்தவர் மீது எந்தத் தவறும் இல்லை. கும்பமேளாவில் இறந்தவர்களின் விவரங்கள், அவர்களுக்கு செலுத்தப்பட்ட, செலுத்தப்பட வேண்டிய இழப்பீடு தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Read more: இந்திய விமான துறையில் வேலை வாய்ப்பு.. ரூ.34 ஆயிரம் சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?