‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ள நிலையில், சூர்யாவின் கதாபாத்திரத்தில் அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யாவும் பாலாவும் இணைந்திருந்தபோது வணங்கான் படத்தின் 30% படப்பிடிப்பு முடிந்திருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் ,கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு படத்திலிருந்து சூர்யா விலகினார். சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனமும் இப்படத்திலிருந்து பின்வாங்கியதால், தற்போது இயக்குநர் பாலா தனது சொந்த தயாரிப்பில் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி மற்றும் மலையாள நடிகை மமிதா பைஜு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் நாயகன் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அந்த கதாபாத்திரத்துக்குத்தான் அருண்விஜய் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதன் படப்பிடிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் 2023 புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் சூர்யாவுக்கு மாற்றாக நடிகர் அதர்வா நடிப்பாரென சொல்லப்பட்ட நிலையில், தற்போது அருண்விஜய் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அருண்விஜய்க்கு 2022இல் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சினம், யானை மற்றும் ஓ மை டாக் ஆகிய படங்கள் அவருக்குத் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தற்போது அருண் விஜய், இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடனான தனது படத்தை முடிப்பதில் மும்முரமாக இருப்பதால், பிப்ரவரி 2023 இல் ‘வணங்கான்’ பட வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.எல்.விஜய்யுடன் அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. நிமிஷா சஜயஜனும் நடிக்கிறார். த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.