மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவிலுடைய சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக 4ஆம் தேதி மதுரை மூன்று மாவடி, தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளகூடிய ஆழ்வார்புரம் பகுதியில் மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், தளபதி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் இன்று நேரடியாக ஆய்வு செய்தனர்.
கடந்த ஆண்டு சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பக்தர்கள் வருகை, வாகன தடை, தண்ணீர் திறப்பு, மேடை அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அனிஸ் சேகர், ”மே 5 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களின் வருகை தருவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பக்தர்கள் அச்சமின்றி சாமி தரிசனம் செய்ய போலீஸ் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு போல எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.