தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தங்கி படித்து மற்றும் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடி வருகின்றனர். குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய பலரும் நேற்று காலை மற்றும் மாலையில் மீண்டும் சென்னைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை பொள்ளாச்சியில் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்று
கூடி தீபாவளியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தீபாவளி மறுநாள் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மயிலந்தீபாவளி என்று பெயர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிக்கு அருகே உள்ள வடசித்தூரை சேர்ந்த கிராம மக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து, வாண வேடிக்கையுடன், இஸ்லாமிய மக்களுக்கு விருந்து வைத்து மயிலந் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலந் தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர். இந்த ஆண்டு வடசித்தூர் கிராம மக்கள் அதனை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீபாவளி கொண்டாடியதில் அப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.