தமிழக பாஜகவில் மீனாவுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது..
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவில் மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி இருந்தார்.
இந்த சூழலில் டெல்லி பாஜக தலைமையின் அழைப்பை ஏற்று நேற்று நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார். அப்போது தேசிய பாஜக தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது புதிய நிர்வாகிகள் பட்டியலுக்கு நட்டா ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த பட்டியல் தற்போது அமித்ஷாவுக்கு அனுப்பட்டுள்ளதாம். அவர் ஒப்புதள் அளித்த பின்னர் இந்த பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அனுப்பபட்ட பட்டியலில் சில மாற்றங்கள் செய்து வரும் வெள்ளிக்கிழமை புதிய பட்டியல் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, நடிகைகள், குஷ்பு, மீனாவுக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வினோஜ் பி. செல்வம், கே.பி. ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி ஆகிய 4 பேருக்கும் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது..
நடிகர் சரத்குமார் தேசிய அளவில் பொறுப்பு கேட்டதால், தற்போதைய மாநில நிர்வாகிகள் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நடிகை மீனா – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவர் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் சில பாஜக தலைவர்களை மீனா சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதாவது மீனாவுக்கு டெல்லி பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும். கங்கனா ரணாவத் பாணியில் ஒரு புதிய முகத்தை தமிழ் நாட்டில் பாஜக உருவாக்கி வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை மீனா சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. மீனா மத்திய துணை அமைச்சராக போகிறார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் தமிழக பாஜகவில் மீனாவுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்று தற்போது வெளியாகி உள்ள தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
Read More : “இந்தியர்கள் அந்த இருண்ட நாட்களை மறக்க மாட்டார்கள்..” அவசர நிலையின் 50-வது ஆண்டு குறித்து பிரதமர் மோடி..