மத்திய அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்திய அஞ்சல் துறையிலிருந்து (India Post) ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த அறிவிப்பின் கீழ், கிராம அஞ்சல் பணியாளர்கள் (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய முக்கியப் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List) தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டியதுடன், இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி ஓட்ட தெரிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பைப் பொறுத்தவரை, 18 முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மேலும், அரசு விதிமுறைகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர், வரும் ஜனவரி 15-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



