மேகாலயா கொலை வழக்கில் கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தவர்களுக்கு சோனம் ரகுவன்ஷி ரூ. 20 லட்சம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது. திருமணமான சில நாட்களுக்குப் பிறகு மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற போது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொல்ல, மனைவி சோனம் ரகுவன்ஷி, கொலையாளிகளை வேலைக்கு அமர்த்தியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான புதுப்புது தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சோனம், தனது கணவரை கொல்ல ரூ.20 லட்சம் கொடுத்ததாக மேகாலயா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தின் காஜிபூரில் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்த சோனம் ரகுவன்ஷியை செவ்வாய்க்கிழமை மேகாலயா போலீசார் கைது செய்தனர். பின்னர் அதே இரவு அவர் ஷில்லாங்கிற்கு அழைத்து வரப்பட்டார். கொலை தொடர்பாக அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேகத்திற்குரிய ஒப்பந்தக் கொலையாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சோனம் காவல்துறையில் சரணடைந்தார்.
கைது செய்யப்பட்ட ராஜ் குஷ்வாஹாவில் காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மேகாலயா காவல்துறையுடன் விசாரணையில் பணியாற்றும் இந்தூரைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ ராஜ் குஷ்வாஹா சோனமை ஆதரிக்க விரும்பவில்லை என்பதால் கடைசி நேரத்தில், மேகாலயாவுக்குச் செல்லும் தனது திட்டத்தை ரத்து செய்துள்ளார். மற்ற மூவரையும் போக வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் சோனம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பிறகு அவர்கள் மேகாலயாவைப் பார்க்கச் சென்றனர். கடைசி நேரத்தில் கூட, மூவரும் கொல்ல மறுத்துவிட்டனர், ஆனால் சோனம் வற்புறுத்தி, அதற்காக ₹15 லட்சம் தருவதாகக் கூறினார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..” என்று தெரிவித்தார்.
மேகாலயா ஹன்மூன் கொலை வழக்கு பின்னணி
சோனமும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹாவும் ராஜாவின் கொலையில் ஈடுபட்டதாக காவல்துறையின தெரிவித்துள்ளனர். நேற்று இந்த வழக்கில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது. இந்த ஜோடி மே 11 அன்று திருமணம் செய்து கொண்டு மே 21 அன்று மேகாலயாவுக்குச் சென்றது. மே 23 அன்று அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் தேதி கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள சோஹ்ராவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தம்பதியினர் காணாமல் போன அதே நாளில் மே 23 ஆம் தேதி கொலை நடந்ததாக போலீசார் நம்புகின்றனர்.
தனது காதலர் ராஜ் குஷ்வாஹா உடன் சேர்ந்து முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொலையை சோனம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சோனம், ராஜ் குஷ்வாஹா இருவரும் இந்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கிழக்கு காசி ஹில்ஸ் காவல் துறை அதிகாரி விவேக் சையம் கூறுகையில், “ ராஜா ரகுவன்ஷி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவரது மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் FIR தெளிவாகக் குறிப்பிடுகிறது. கொலையாளிகளுக்கு பணம் கொடுத்து பின்னர் ஒரு பெரிய தொகையை வழங்கியதில் சோனம் ஈடுபட்டிருப்பது ஒரு சதித்திட்டத்தை வலுவாக சுட்டிக்காட்டுகிறது. முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்..” என்று தெரிவித்தார்.
மேகாலயா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சோனமின் அறிவுறுத்தல்களின் பேரில் செயல்பட்டதாகவும், கொலைத் திட்டத்தை ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து அவர்கள் வகுத்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை எப்படி நடந்தது?
கொலை நடந்த இடத்தை அடைவதற்கு சற்று முன்பு சோனம் சோர்வாக இருப்பது போல் நடித்ததாக கொலையாளிகள் கூறியதாக மேகாலயா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜாவின் பின்னால் கொலையாளிகளை நிறுத்திவிட்டு, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியை அடைந்ததும், கொலை செய்யுமாறு கொலையாளிகளிடம் சோனாம் அறிவுறுத்தி உள்ளார். சோனமையும் கொலையாளிகள் 3 பேரையும் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக அதிகாரி மேலும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாகக் காட்டிக் கொண்டு, தம்பதியினருடன் நட்பு கொண்டு, கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ராஜ் குஷ்வாஹா உடன் வரவில்லை என்றாலும் சோனம் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், அந்த நேரம் முழுவதும் அவர் தொலைபேசியில் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..