உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில், இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ நேரத்தில் மொத்தம் 29 தொழிலாளர்கள் முகாமில் இருந்தனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டதாகவும், 7 பேர் காணாமற்போனதாகவும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பின்னர், காணாமல் போனவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போன 7 தொழிலாளர்களும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். இந்த மழையால் உத்தரகாசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், மழையால் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேக வெடிப்பு சம்பவம் குறித்து பர்கோட் காவல் நிலைய பொறுப்பாளர் தீபக் கூறுகையில், “நள்ளிரவில் தகவல் கிடைத்ததும், காவல்துறை குழு சம்பவ இடத்துக்குச் சென்றது. சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். கனமழையால் முகாமே அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்” என்றார்.
யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல சாலைகள் முழுமையாக சேதமடைந்து உள்ளன. ஓஜ்ரி அருகே உள்ள சாலை முற்றிலும் சிதைந்துள்ளது. குத்னூர் கிராமத்தில் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், குப்பைகளால் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டத்தில் உள்ள குத்னூர் கிராமத்தில் கனமழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. கனமழையைத் தொடர்ந்து யமுனையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
Read more: முடி சாயம் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்..!! – எச்சரிக்கும் டாக்டர் ரகுநாத்