வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது..
இந்த தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. மேலும் இந்த புயல் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு கரையை கடக்க உள்ளது.. மோன்தா புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்..
இந்த புயல் காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் மிதமான மழை தொடர்கிறது.. ஆனால் வட சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக எண்ணூரில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது.. சென்னை கத்திவாக்கத்தில் 9 செ.மீ மழையும், விம்கோ நகரில் 8 செ.மீ மழையும், மணலி, மாதவரம் பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது..
இந்த புயல் காரணமாக இன்றும் சென்னையில் மழை தொடர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோ ரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இதனிடையே மோன்தா புயல் காரணமாக தமிழ்நாடு, ஒடிசா மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது..



