தமிழ்நாட்டில் பல்வேறு சூழல்களால் ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ‘அன்புகரங்கள்’ என்ற உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெற்றோரை இழந்த அல்லது போதிய அரவணைப்பு கிடைக்காத 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதம் தோறும் 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் பள்ளிப் படிப்பை எவ்வித தடையுமின்றி தொடர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பல விரிவான தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரு பெற்றோர்களையும் இழந்து உறவினர்களின் ஆதரவில் வளரும் குழந்தைகள் மட்டுமின்றி, ஒரு பெற்றோர் உயிரிழந்த நிலையில் மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெற்றோரில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ, சிறை தண்டனை அனுபவித்து வந்தாலோ அல்லது உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அக்குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் உதவிபெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். பள்ளிப் படிப்பிற்குப் பிந்தைய உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அரசே முன்னெடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், குடும்ப அட்டை (Ration Card), குழந்தையின் ஆதார் அட்டை, வயது சான்றிதழ் மற்றும் வங்கியின் சேமிப்பு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் (Tahshildar) அலுவலகத்தை அணுகலாம். இது தவிர, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்களிலும் இத்திட்டத்திற்கான மனுக்களை நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். அரசு அதிகாரிகளின் முறையான கள ஆய்விற்குப் பிறகு, தகுதியான குழந்தைகளுக்கு இந்த மாதாந்திர உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



