தமிழ் சினிமாவில் பகுத்தறிவோடு நக்கலும், நய்யாண்டியும் செய்தவர் எம்.ஆர்.ராதா. இவர் நடித்த படங்களில் இவரது டயலாக்கை வைத்தே கண்டறியலாம். இவர், 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம். ஆர். ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு – ராஜம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்.
சிறுவயதில் தந்தையை இழந்த எம்.ஆர்.ராதா, பள்ளிக்குப் போகாமல் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டார். பின்னர், ஒரு நாடக கம்பெனியில் இணைந்து பணியாற்றினார். இதைத்தொடர்ந்து, நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். ராமாயணம் நாடகத்தை அரங்கேற்றியபோது, மாட்டுக்கறி கூட சாப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையான நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். மேலும், எம்ஜிஆரை துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகவும் இவர், மீது பல சர்ச்சைகள் உண்டு.
இந்த வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவரது வயதை கருத்தில் கொண்டு அவருக்கு 4 ஆண்டுகள், 3 மாதங்களாக தண்டனை குறைக்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் எம்.ஆர்.ராதா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். பின்னர், திருச்சி வீட்டில் தனது 72ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில் தான், எம்.ஆர்.ராதாவின் பேரன் வாசு விக்ரம் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அதில், ”என் தாத்தாவுக்கு மொத்தம் 8 மனைவிகள். எல்லாரும் 2 மனைவிகளை திருமணம் பண்ணிக்கிட்டு திண்டாடுறாங்க. ஆனால், என் தாத்தா 8 மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டார். 20 குழந்தைகளை பெத்து ஒரே வீட்டில் வைத்து சமாளித்தார். வீட்டில் தினமும் 100 பேருக்கு சமையல் நடக்கும். 6 கார், 2 வேன் இருந்தது. தாத்தா பிள்ளைகளுக்கு சொத்தை சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தார். எல்லா மனைவிகளுக்கும் தலா 100 பவுன் நகை, சரிசமமாக நிலம் என அனைத்தையும் பிரித்து கொடுத்தார்.
மேலும், நிறைய பேரக் குழந்தைகள் இருந்ததால் அவருக்கு அடையாளம் தெரியாது. திருச்சியில் 43 வீடுகளை ஒரே இடத்தில் காட்டினார். ஆனால், அதை பராமரிக்க முடியாததால், விற்றுவிட்டோம். சித்தப்பா ராதாரவி வீடு தான் எங்களுக்கு ஹெட்ஹோட்டர்ஸ். தாத்தா இறந்த 5 வருடங்களில் தந்தையும் இறந்துவிட்டார். தாத்தா பற்றி எதுவும் தெரியல. சினிமாவுக்கு வந்த அப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.