தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி (Advanced GST and Income Tax Professional), தொழில் உற்பத்தி பயிற்சி (Certified Manufacturing Professional with Specialization in Industry 40), டிஜிட்டல் திறன்களில் ITES மற்றும் BPO பயிற்சி (Certified ITES & BPO Professional with Specialization in Digital Skills), UI/UX (Certified Web Technologies with Specialization in UL/UX), இணைய தொழில்நுட்ப பயிற்சி (Certified Digital Marketing Professional) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும்,21 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணைய தளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: Tn Govt: 109.094 கி.மீ. நீளத்துக்கு ரூ.270.83 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு…!