புதுச்சேரியில் நடத்தையில் சந்தேகத்தால் 2-வது மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 38). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில், 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32). இவர் கொக்கு பார்க் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி மேட்டுப்பாளையம் பகுதியில் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கணவன் மதிவாணனுக்கு இரண்டாவது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இதற்கிடையே, சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவன் மதிவாணன், வீட்டில் இருந்த மரக்கட்டையால் லட்சுமியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில், அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பயந்துபோன மதிவாணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மதிவாணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.