பலருடன் தகாத உறவில் இருந்ததை பலமுறை கூறியும் மகள் கேட்காததால் கட்டிய கணவனின் உதவியாடு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பெண்ணின் தாய் ரெஜினா, தந்தை செல்வகுமார் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அன்று குடும்பத் தகராறு காரணமாக சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பெண்ணின் கணவன், பெற்றோர் என மூவரும் கூறியுள்ளனர். சுமித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலை வழக்காக பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர், பெண்ணின் தாய், தந்தை, கணவரிடம் காசிமேடு போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டார். அருகில் வசித்திருப்பவர்களிடம் தாய் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், கணவர் தனது நண்பர்களிடம் பூச்சு மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனர். மேலும் சுமித்ராவின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் அகால மரணம் என்பதற்கு பதிலாக இயற்கை எய்தினார் எனவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், அரசு ஸ்டான்லி மருத்துவர் ஜனனியின் பிரேத பரிசோதனை முடிவில் ஆய்வாளரின் 20 கேள்விகளுக்கும் இது கொலை என உறுதிபடுத்தவே ஆய்வாளர் விசாரணையை தீவிரபடுத்தினார்.

போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மகளை கழுத்தை நெறிந்து கொன்றதாக அவரது தாய் ஒப்புக்கொண்டார். அவர் போலீசாரிடம் கூறியதாவது, ”என் மகளுக்கு பல ஆண்களோடு தகாத உறவு இருந்தது. இதனை நான் தட்டிக்கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது என் மகள் பூஜை அறையில் இருந்த மணியை கொண்டு என்னை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நான் திரும்பி கழுத்தை நெறித்தேன். அப்போது என் கணவர் கால்களையும் எனது மருமகன் கையை இறுக்க பிடித்துக் கொண்டனர். 3 சேர்ந்து மகளை கொலை செய்தோம்” என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, மூவரும் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.