பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான அகில் அக்தரின் மர்ம மரணம், மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அகில் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருப்பது, இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகவும், மேலும் தனது தாயும் சகோதரியும் தன்னைக் கொலை செய்ய சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ வாக்குமூலத்தின் அடிப்படையில், அகிலின் தந்தையும் முன்னாள் டிஜிபி-யுமான முகமது முஸ்தபா மற்றும் தாயாரும் முன்னாள் பஞ்சாப் மாநில அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ரஜியா சுல்தானா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அகில் அக்தர் கடந்த வியாழக்கிழமை இரவு பஞ்ச்குலாவில் உள்ள தனது வீட்டில் மயக்கமான நிலையில் கிடந்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அகில் அளவுக்கு அதிகமாகப் போதைப்பொருள் உட்கொண்டதன் காரணமாகவே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், முதற்கட்ட விசாரணையில், அவர் சில மருந்துகளை எடுத்துக்கொண்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகில் பதிவு செய்து குடும்ப நண்பர்களுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தான் விசாரணையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும் அந்த வீடியோவில், அகில் தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே இருந்த தகாத உறவு குறித்துப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோவில், “எனது தந்தையுடனான என் மனைவியின் தகாத உறவை நான் கண்டுபிடித்தேன். இதனால் நான் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளேன். அவர்கள் என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துவிடுவார்கள் என்று தினமும் அஞ்சுகிறேன்” என்று அகில் கூறியுள்ளார்.
மேலும், “என்னை பொய்யாகச் சிறையில் அடைப்பது அல்லது கொலை செய்வதுதான் எனது தாயின் மற்றும் சகோதரியின் திட்டம். எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே எனது மனைவியை தந்தைக்கு தெரியும். அவள் என்னை அல்ல, எனது தந்தையைத்தான் திருமணம் செய்துகொண்டாள்” என்றும் அவர் அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தனது குடும்பத்தினர் தங்கள் நற்பெயரைப் பாதுகாக்க தன்னை ‘பைத்தியம்’ என்று சித்தரிக்க முயல்வதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், பாலியல் வன்கொடுமை அல்லது கொலை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டுவதாகவும் அகில் அதில் கூறியுள்ளார். இருப்பினும், அகில் மற்றொரு வீடியோவில், தனது குடும்பத்தினர் மீது தான் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனது மனநலப் பிரச்சனையால் ஏற்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து துணை காவல் ஆணையர் சிருஷ்டி குப்தா கூறுகையில், “அகிலின் மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகம் எழவில்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களுக்கு இதில் பங்கு இருப்பதாக ஒரு புகார் வந்தது. மேலும், அகில் அக்தரின் சமூக ஊடகப் பதிவுகள், சில வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை சில சந்தேகங்களை எழுப்பியதால், அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : நீங்கள் மின்னல் தாக்கும் இடத்தில் இருக்கீங்களா..? உங்கள் உயிரை பாதுகாப்பது எப்படி..?



