புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் 12 வயது பள்ளி மாணவி நெயில் பாலிஷ் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் அபிஷேகபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி (32). இவரது கணவர் பிரணவ். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூவரும் அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கனிமொழியின் இரண்டாவது மகள் ஸ்ரீமதி (12) சம்பவத்தன்று மதிய உணவு நேரத்தில் நெயில் பாலிஷை குடித்துள்ளார். இதனைப் பார்த்த பள்ளி ஊழியர்கள் ஸ்ரீமதியை அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
![நெயில் பாலிஷை குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட 12 வயது சிறுமி..!! அதிர்ச்சி தகவல்](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/index-9.jpg)
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த தவளகுப்பம் போலீசார் மாணவி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நேற்று காலை தனது அக்கா உடன் ஸ்ரீமதி சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது தாய், மாணவியை கண்டித்துள்ளார். இதில் ஸ்ரீமதி காலை முதலே பள்ளியில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில், மதியம் உணவு நேரத்தில் நெயில் பாலிஷ் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் சக மாணவிகள் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.