நாடு முழுவதும் இந்தியா 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் தேச பக்தியுடன் ஏற்றி வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு, சமீபத்தில் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி பூமியின் குறைந்த தூர வட்டபாதையில் நிலைநிறுத்தியது. ஆசாதிசாட் என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததின் அடையாளமாக நாடு முழுவதிலும் இருந்து 750 மாணவிகள் பங்கு கொண்டனர். மேலும் இந்தியாவுக்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கத்துடனும் மற்றும் குழந்தைகளிடையே எல்லைகளற்ற உலகு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், இந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
நாட்டின் சுதந்திர திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பலூன் ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்க விடப்பட்டது. இந்திய சுதந்திர தினத்திற்கு, சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோபோரெட்டி, இந்திய அமெரிக்கரான ராஜா சாரி போன்றோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இதுகுறித்து ராஜா சாரி கூறும்போது, நாசா மற்றும் இஸ்ரோ அமைப்பு நீண்டகால ஒத்துழைப்புடன் செயல்பட்ட வரலாறை கொண்டது. அந்த ஒத்துழைப்பு இன்றளவும் தொடர்கிறது. அதனால், நாங்கள் விண்வெளி மற்றும் புவி அறிவியல் இயக்கங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம் எனறு தெரிவித்துள்ளார்.