மும்பையில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் மற்றும் காதலன் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகே நாலாசோபாராவில் இளம்பெண் (20) ஒருவர் வசித்து வருகிறார். இவர், திருமணம் செய்யாமல் சேர்ந்து கலாம் கான் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இரவில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஜன்னல் வழியாக இருவர் மீதும் ஆசிட் வீசப்பட்டது. இதில், இரண்டு பேரின் முகம், கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அப்போது கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், ”நான் கடந்த ஆண்டு தபீக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு காட்கோபரில் வசித்து வந்தேன். ஆனால், என்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தபீக் அடித்து உதைத்தார். இதனால் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவரைவிட்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு கம்ரான் அன்சாரி என்பவரைச் சந்தித்தேன். அவரும் காட்கோபரை சேர்ந்தவர்தான். அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தேன். அன்சாரியும், தபீக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். ஆனால், அன்சாரி என்னை திருமணம் செய்யாமல் இழுத்தடித்தார். இதனால் அவரையும் விட்டுவிட்டேன். அதன் பிறகு நாலாசோபாராவைச் சேர்ந்த கலாம் கான் என்பவரைச் சந்தித்தேன். அவருடன் காதல் ஏற்பட்டதால் அவருடன் கடந்த சில மாதங்களாக சேர்ந்து வாழ்கிறேன். கலாம் கானைப் பற்றி அன்சாரி, தபீக்குக்கு தெரியாது.
நான் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து தெரிந்தவுடன் எங்களது வீட்டிற்கு இருவரும் வந்து என்னுடனும், கலாம் கானுடன் சண்டையிட்டதோடு எங்களை மிரட்டிவிட்டுச் சென்றனர். அவர்கள் இருவர்தான் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக எங்கள் மீது ஆசிட் வீசிச் சென்றிருக்கின்றனர்” என்று தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.