தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரி கே.டி.ராமாராவ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டாமல் ஒன்றிய அரசு கட்டும் நடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறுவதா? என அம்மாநில பாஜவினர் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.