பாம்பு கடித்து உயிரிழந்த சிறுவனின் உடலை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் முன்வராததால், தந்தையே தனது தோளில் சுமந்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், பல சமயங்களில் அதனை மறந்து சில அரசு ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில், திருப்பதி மாவட்டத்தை அடுத்து கே.வி.பி.புரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் செஞ்சய்யா. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 7 வயதில் பசவையா என்ற மகன் உள்ளான். இவர், அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் குடும்பத்தோடு தங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தனர்.
![ஆபத்துக்கு உதவாத ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..!! மகனின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Death.jpg)
அப்போது, அங்கு திடீரென்று வந்த பாம்பு சிறுவன் பசவையாவை தீண்டியுள்ளது. இதை அறிந்த அவரது தந்தை உடனடியாக சுகாதார மையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட போதிலும் அவரது மகனை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து அவரது மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வர மறுத்து விட்டது. மேலும், அங்கிருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அழைத்துள்ளார். ஆனால், அவரது மகன் உடலை ஏற்றி செல்ல யாரும் முன்வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மகனை தனது தோளின் மீது சுமந்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.