இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்த இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தார்.
இதற்கிடையே, அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு அவருடைய உடல் நிலையும் சீராக இருந்தது. இதையடுத்து, வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், திலக் யாதவின் இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.