நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பேடி எம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. தற்போது அனைவரும் இந்த பழக்கத்திலிருந்து மாறிவிட்டது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் கர்நாடகவைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர், தன்னுடைய காளையின் தலையில் க்யூர் கோட் வைத்து பணம் வசூலித்து வரும் நிகழ்வு தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுப்போன்ற வீடியோ ஒன்றைத் தான் கடந்த 2021இல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். இதோடு டிஜிட்டல் பேமென்ட் புரட்சி என்பது நாட்டுப்புற கலைஞர்களையும் சென்றடைந்து விட்டது என்றும், நிச்சயம் இது டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் ஓர் அங்கம் என தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளையும், கமெண்ட்களையும் தெரிவித்துவந்தனர். அந்த சமயத்தில் நெட்டிசன்களிடம் டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வீடியோவால் ஈர்க்கப்பட்டார் உடுப்பியைச் சேர்ந்த கலைஞர் கணேஷ் ஹவன்ஜே. எப்படி இதை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்றுள்ளார். பின்னர் தன்னுடைய திறமையால் காளை வடிவில் ஒரு சிற்பம் ஒன்றை உருவாக்கினார். அதனுடன் இசைக்கருவியை பொறுத்தியுள்ளதோடு, க்யூர் கோட் பயன்படுத்தி பணம் செலுத்தும் போதெல்லாம் காளை தலையை ஆட்டுவது போன்று வடிவமைத்துள்ளார். பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இது காட்சிப்படுத்தப்பட்டது. இவர் யார்? ஏன் இந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார் என்பது இவரின் திறமையைப் போன்றே சுவாரஸ்சியமான தகவலாக இருந்தது.
மும்பையில் கேன்டீன் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் கணேஷ் ஹவன்ஜே. பத்தாவது மட்டுமே படித்துள்ள இவர், தன்னுடைய திறமைக்கு ஏற்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இருப்பினும், அவர் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஒரு கலைநுட்பம் இருந்துள்ளது. எனவே தான் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என முயற்சித்த இவர், எவ்வித தொழில் பயிற்சியும் இன்றி சிற்பங்களைச் செய்ய தொடங்கியுள்ளார். இதன் பலன் தான், அவர் செய்த இந்த காளை வடிவிலான சிற்பம். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமையான மற்றும் டிரெண்டிங் ஆன விஷயங்களை எப்போதும் பொதுமக்கள் வரவேற்பார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளார் கலைஞர் கணேஷ் ஹவன்ஜே.