கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் தன்வீர்சேட் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு பதிலளிக்கையில் கூறியதாவது;-
கர்நாடகத்தில் வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் அனைத்து அரசு பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 35 ஆயிரம் அரசு பேருந்துகள் உள்ளன. மின்சார பேருந்துகளாக மாற்ற தேவையான உதவிகளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்து வருகிறார். மின்சார பேருந்துகளாக மாற்றுவதால் செலவு குறையும் மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக பெங்களூருவில் 90 மின்சார பேருந்துகளின் சேவை ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 12 வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 64 ரூபாய் செலவாகிறது. ஸ்மார்ட் திட்டத்தில் மொத்தம் 300 மின்சார பேருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 90 பேருந்துகள் இயங்குகின்றன. மீதமுள்ள பேருந்துகள் படிப்படியாக போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படும். மேலும் 921 மின்சார பேருந்துகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.