ஈவ் டீசிங் செய்வதை தட்டி கேட்ட மாணவ, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் CMS என்ற தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோட்டயம் சென்ட்ரல் சந்திப்பு அருகே உணவு வாங்கியுள்ளார். திரும்பி வருகையில் அவரது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த சில மாணவிகளை 3 பேர் கொண்ட கும்பல் ஈவ் டீசிங் செய்துள்ளனர். அப்போது இதனைக் கண்ட சக மாணவிகள் அவர்களை தட்டி கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, அந்த கும்பல் இந்த மாணவர் மற்றும் மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் பிரச்சனையில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து CMS கல்லூரி மாணவிகள் நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதன்படி அங்கு படிக்கும் சில மாணவிகள் தங்களது முடிகளை வெட்டி போராட்டம் நடத்தினர். இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.