நிர்வாண பூஜை தொடர்பாக இளம்பெண் ஒருவர், கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்ட சத்யபாபு குடும்பத்தினர், திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் அவர்களது வீட்டிற்கு சில மந்திரவாதிகளை அழைத்து வந்துள்ளனர். சத்யபாபு வீட்டில் தீய சக்தி இருப்பதாகவும், அதனை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மந்திரவாதிகள் கூறியுள்ளனர். மேலும், மாமியார் ஷைலஜா (60) மற்றும் கணவருக்கு நோய் இருப்பதாகவும், அதனை குணப்படுத்த வீட்டிலுள்ள மருமகள் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர்களும் அதை நம்பி, தங்களுக்கு இருக்கும் நோயை குணப்படுத்த நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்று சத்யபாபுவின் மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால், பதறிப்போன அந்த பெண், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், தனது குடும்பத்தின் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும், பல ஆண்டுகளாக அந்த பெண்ணின் கணவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் வெளிவந்த இரண்டு பெண்கள் நரபலி சம்பவத்தினால், மீண்டும் அந்த பெண் தனது புகார் குறித்து குரலெழுப்பியுள்ளார். இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு கணவர் சத்யபாபு மற்றும் மாமியார் ஷைலஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாமியார் கைதான நிலையில், கணவர் சத்யபாபு தலைமறைவாகி விட்டார். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக கருதப்படும் அப்துல் ஜப்பார் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.