அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் விடுப்புக்காக குறிப்பிட்டுள்ள காரணங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பங்கா மாவட்டம் கச்சாரி பிப்ரா கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்பவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுப்பு கேட்டு தனது பள்ளி தலைமை ஆசிரியருக்கு லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”என் அம்மா டிசம்பர் 5 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு இறந்துவிடுவார் என்பதால் அவரின் இறுதிச் சடங்குகளுக்காக டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7ஆம் தேதி விடுப்பு எடுக்கவுள்ளேன், தயவு செய்து விடுப்புக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல நீரஜ்குமார் என்ற மற்றொரு ஆசிரியர், ”டிசம்பர் 7ஆம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு நன்றாக சாப்பிட உள்ளேன். அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் 3 நாட்கள் விடுப்பு வேண்டும்” என கேட்டுள்ளார். தற்போதைய மாணவர்களே முறையான காரணத்தை கூறி விடுப்பு எடுத்துவரும் நிலையில், பள்ளி ஆசிரியர்களின் இதுபோன்ற கடிதம் பீகார் மாநிலத்தில் நிலையை காட்டுகிறது. பலரும் அந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். பீகாரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்புக்கான விண்ணப்பங்களை 3 நாட்களுக்கு முன்பே தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்டக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுபோன்ற கடிதங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.