மூடநம்பிக்கை என்ற வார்த்தை ஒன்றுக்கு ஆயிர சாட்சிகள் இருக்கு, புதையல் எடுக்க நரபலி கொடுத்த தம்பதியினர் போன்ற மூடநம்பிக்கையால் கொலைகாரர்கள் ஆன பல நிகழ்வுகள் இங்கு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து இதுபோல் குற்றங்கள் பெருகிக்கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்ததாக இல்லை. சமீபத்தில் கூட மதுரையில் உடல் நலக்குறைவால் இறந்த மனைவி, ‘உயிர்த்தெழுவார்’ என்ற மூடநம்பிக்கையுடன், அவரது உடலுடன் மூன்று நாட்களாக கணவர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் காத்திருந்தனர். இதில் சிந்திக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் அந்த இரண்டு மகன்களும் டாக்டர்கள் ஆவர், பிறகு போலீசார் கண்டித்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர். படித்தவர்களே சிந்திக்காமல் இது போல மூடநம்பிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதே போல் ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திராவில் நடந்து வருகிறது. கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் வைத்த பேனர் தான் இன்று பேசு பொருளாகியுள்ளது. அப்படி என்ன பேனர் வைத்தார் என்று நீங்களே பாருங்கள். பாதிரியார் வைத்த பேனரில் “10 நாட்களில் இறப்பு, மீண்டும் 3 நாட்களில் உயிர்த்தெழுதல் தொடர்பான வாசகங்கள் இருந்தது. அதுவும் பாதிரியாரின் சொந்தமான இடத்தில் சமாதி தோண்டி, அதன் அருகில் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன், அதோடு இறந்த பிறகு அடுத்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்று கூறிவருகிறாரம் அந்த பாதிரியார். இவரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். மேலும் பாதிரியாரின் இந்த வினோத செயலால் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருப்பதோடு செய்வதறியாது தவித்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.