தனது வகுப்பில் படிக்கும் சிறுவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த உதவி ஆசிரியையின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் ஊர்மிளா சிங் என்பவர் உதவி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வகுப்பில் படிக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து, ”எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. அதனால், என்னுடைய கைகளைப் பிடித்துவிடு” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவனும் ஆசிரியருக்கு பயந்து, அவரின் கைகளைப் பிடித்து மசாஜ் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
![பள்ளி சிறுவனை மிரட்டி ஆசிரியை செய்யும் காரியமா இது..? இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/Student-Massaging-Teacher.jpg)
இந்தச் சம்பவம் கடந்த 27ஆம் தேதி நடந்த நிலையில், வீடியோ வைரலாகி சர்ச்சையைக் கிளம்பியதை அடுத்து, ஆசிரியரின் செயலுக்குக் கண்டனம் வலுத்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளி மாணவனை மசாஜ் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்திய ஆசிரியை ஊர்மிளா சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கல்வித்துறை அதிகாரிகள், ”சிறுவனை மிரட்டி கைகளைப் பிடித்துவிடச் சொன்ன அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவ ர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.