கடன் பிரச்சனையால் குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கோஸ்கியை சேர்ந்த வெங்கடேஸ்வர். இவரது மனைவி மானசா (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், பாலாதித்யா (8), பவ்ய ஸ்ரீ (7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஸ்வரின் உடல்நிலை சரியில்லாததால், 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்பு, நிஜாமாபாத் என்ற இடத்திற்கு மானசா சென்றார். அங்கு தனது சகோதரர் சந்தீப்புடன், மானசா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். தனக்கு கடன் சுமை அதிக உள்ளதால், வேலைக்கு செல்ல மானசா முடிவு செய்தார். இதனால் அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஜனவரி 23ஆம் தேதி, மானசா தனது சகோதரர் சந்தீப்பிடம் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, பள்ளியில் இருந்த தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, நிர்மல் மாவட்டம் பாசார் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றார். அந்த பகுதியில் இருக்கும் ஆற்றின் அருகே அமர்ந்து குழந்தைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு, ஆற்றில் இரண்டு குழந்தைகளை வீசியுள்ளார். பின்னர், அவரும் ஆற்றில் குதித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.