விரைவு ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணியின் பிரசவத்திற்கு உதவிய இறுதி ஆண்டு மருத்துவ மாணவியின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகுளத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று செகந்திராபாத் துரந்தோ விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்த அந்தப் பெட்டியில் மருத்துவ மாணவி ஒருவரும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், அந்த விரைவு ரயில் அனாகபள்ளி ரயில் நிலையத்தை அடைவிருந்தபோது, அந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சக பயணிகள் என்ன செய்வதென தெரியாமல் இருந்தபோது, அந்த மருத்துவ மாணவி ஓடிச்சென்று அப்பெண்ணிற்கு உதவி செய்துள்ளார். நிலைமையை புரிந்துகொண்ட மாணவி, கர்ப்பிணி பாதுகாப்பாக குழந்தையை பெற்றெடுப்பதற்கு உதவி செய்துள்ளார். மாணவியின் உதவியால் குழந்தை நலமுடன் பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலமுடன் இருப்பதையும், குழந்தை பிறக்க மாணவி ஒருவர் உதவியதையும் அறிந்த கர்ப்பிணியின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவியின் செயலை சக பயணிகளும், குடும்பத்தினரும் பயணத்தின்போது இரண்டு உயிர்களை காப்பாற்றியதற்காக வெகுவாக பாராட்டினர். இதனைத் தொடர்ந்து ரயில் அனகாபள்ளி ரயில் நிலையத்தை அடைந்ததும் சக பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.