தாமதமாக வந்த உணவு டெலிவரி ஊழியருக்கு வாடிக்கையாளர் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உணவு டெலிவரி என்பது மிகவும் பிரபலமான ஒரு வேலையாக மாறிவிட்டது. தற்போது அனைவரும் வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்து கொள்கிறார்கள். அதோடு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் முதல் அனைத்து விதமான பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து, வீட்டு வாசலிலேயே பெற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் இந்தியாவை பொருத்தவரை Zomato மற்றும் Swiggy போன்றவைகள் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
இந்நிலையில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே சமீப காலமாக பிரச்சனைகள் நடைபெற்று வந்தாலும், உணவு தாமதமாக எடுத்து வரும்போது கஸ்டமர்களுக்கும், உணவு டெலிவரி செய்பவர்களுக்கும் இடையே கூட சில சமயங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால், உணவு டெலிவரி ஊழியர்கள் டிராபிக் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதால் சில சமயம் உணவை தாமதமாக சப்ளை செய்கின்றனர். இதில், அவர்களை எப்படி நாம் குறை கூற முடியும் என்று சொல்லும் அளவிற்கு டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, சஞ்சீவ் குமார் என்பவர் Zomato நிறுவனத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் உணவு ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்து 4 மணி நேரம் தாமதமாக உணவு கிடைத்துள்ளது. ஆனால், தாமதமாக வந்த ஊழியருக்கு சஞ்சீவ் குமார் மற்றும் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். உங்களுக்காக தான் நாங்கள் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தோம் என்று ஊழியரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, சஞ்சீவ் குமார் டெல்லியில் உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் எங்களுக்கு உணவை டெலிவரி செய்த Zomato நிறுவனத்திற்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி ஆரத்தி எடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.