மனைவியுடன் தினமும் தகராறு ஏற்பட்டதால் கணவர் ஒருவர் பனை மரத்தில் குடியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
உத்தரப்பிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ் என்ற நபர் கிராமத்தின் நடுவில் உள்ள ஒரு பனை மரத்தின் உச்சியில் ஒரு மாதமாக வசித்து வருகிறார். ராம் பிரவேஷின் தந்தை விசுன்ராம் இதுகுறித்து பேசிய போது, மனைவியுடன் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால், மகன் பிரவேஷ் மரத்தின் மீது வசித்து வருவதாக தெரிவித்தார்..
மேலும் ராமின் மனைவி அவரை தினமும் அடிப்பதாகவும்,. தொடர் சண்டையால் சோர்வடைந்த ராம், பனை மரத்தில் வாழ முடிவு செய்ததாகவும் ராமின் தந்தை தெரிவித்துள்ளார். அவர் இயற்கை உபாதையை கழிக்க மட்டுமே கீழே வருவார் என்றும், மற்றபடி உணவு, தண்ணீர் போன்றவற்றை அவரின் குடும்ப உறுப்பினர்கள் கயிறு மூலம் மேலே அனுப்புகின்றனர் என்று கூறப்படுகிறது..
ஆனால் ராமின் இந்த செயலால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களால் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள், ராமர் மரத்தில் வாழ்வதால், தங்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த மரம் சுமார் 100 அடி உயரத்தில் உள்ளதாலும், அருகிலேயே குளம் உள்ளதாலும், பெண்கள் மற்றும் கிராம மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்..
இந்த அசாதாரண சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்தை அடைந்து நிலைமையை வீடியோவாக பதிவு செய்தனர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.