தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தொடர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் மழையால் சூழப்பட்டுள்ளது.
கடந்த 10ம் தேதி 122 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு சீர்காழி தாலுகாவில் 44 செ.மீ. அளவிற்கு மழை பெய்தது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணானது. 20,000 மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கால்நடைகள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை, புறவழிச்சாலை போன்ற சாலை பணிகளால் வடிகால் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டதாலும், தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாததாலும் மயிலாடுதுறை மாவட்டம் மிகப்பெரிய பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.