காதலிக்க மறுத்த சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பதோகி என்ற பகுதியில் 15 வயது சிறுமியை 22 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். நேற்று மாலை தனது சகோதரியுடன் அந்த சிறுமி பயிற்சி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அரவிந்த் விஸ்வகர்மா, அந்த சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தில் அந்த சிறுமி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் அந்த சிறுமியை நீண்ட நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த சிறுமிக்கு அவரை பிடிக்கவில்லை. காதலிக்க முடியாது.. என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்திருக்கிறார் சிறுமி. இதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர் அரவிந்த் விஸ்வகர்மா, அந்த சிறுமியை சுட்டுக் கொன்றது விசாரணையை தெரியவந்தது. இதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.