விதிமுறை மீறி கட்டப்பட்ட மத்திய பாஜக அமைச்சரின் பங்களாவை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர் நாராயண் ரானேயின் ‘ஆதீஷ்’ பங்களா, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பங்களாவை ஆய்வு மேற்கொண்டது. அதில், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதால், நாராயண் ரானேவுக்கு எதிராக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மேற்கண்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் நாராயண் ரானே மனு தாக்கல் செய்திருந்தார்.
![விதிமீறல் கட்டிடம்..! மத்திய அமைச்சரின் பங்களாவை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/narayan-rane-1-1024x569.jpg)
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க சில நாட்களுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இன்று மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ”நாராயண் ரானேயின் விதிமீறல் கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டும், விதிமீறல் தொடர்பாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நாராயண் ரானேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.