அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களை அந்நிறுவனங்கள் அனுப்பும் சம்பவம் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது இம்மாதிரியான சமயங்களில் அதிருப்தியில் இருப்பார்கள்
அந்தவகையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பார்சலில் வந்ததோ மாட்டுச்சாணம். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்.28ஆம் தேதி Flipkart செயலி மூலம் ஆஃபரில் ரூ.1,304 மதிப்புள்ள வாட்ச் ஒன்றை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் ஆர்டர் செய்திருந்தார். அந்த வாட்ச் 9 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தான் டெலிவரி செய்யப்பட்டது.

அந்த வாட்சை நீலம் தன்னுடைய சகோதரர் ரவேந்திராவுக்காக ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி செய்யப்பட்ட வாட்சை பார்ப்பதற்காக ஆர்வமாக பார்சலை பிரித்து பார்த்த ரவேந்திராவுக்கு அதிர்ச்சியே காத்திருந்திருந்தது. ஏனெனில், அதில் வாட்சுக்கு பதில் மாட்டுச் சாணத்தால் ஆன 4 வறட்டிகளே இருந்தது.

அதன் பிறகு ஆர்டரை டெலிவரி செய்தவரை அழைத்து உடனடியாக ரிட்டர்ன் செய்ததோடு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றுள்ளனர். இது போன்ற குழப்பங்களில் இருந்து தப்பிக்க Flipkart-இல் ஓபன் பாக்ஸ் டெலிவிரி என்ற அம்சமும் உள்ளது.