நீட் மறு தேர்வு கோரிய மேல்முறையீட்டு வழக்கில், தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் பெய்த கன மழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முழுமையாக தேர்வை எழுத முடியவில்லை என கூறி சென்னையை சேர்ந்த 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் 4-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்தது.
இதை தொடர்ந்து மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும், 22 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய நீதிபதி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மறு தேர்வு நடத்த தனி நீதிபதி மறுத்ததை எதிர்த்து 13 மாணவர்கள் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நீட் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.