பிரேசிலில் உள்ள ஒரு உள்ளூர் உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட விபத்து, ஜிம் பாதுகாப்பு மற்றும் சரியான எடை தூக்கும் நுட்பங்கள் குறித்து உடற்பயிற்சி நிபுணர்களிடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், 55 வயதான அமெச்சூர் பளுதூக்கும் வீரர் ரொனால்ட் மாண்டினீக்ரோ உயிரிழந்தார்.
டிசம்பர் 1 ஆம் தேதி, ரொனால்ட் பெஞ்ச் பிரஸ் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அதிக எடையுடன் இருந்த பார்பெல் அவரது கைகளில் இருந்து நழுவி, நேரடியாக அவரது மார்பில் விழுந்தது. சம்பவம் நடந்த தருணம் ஜிம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு கவனத்தை ஈர்த்தன.
பார்பெல் விழுந்ததும், ரொனால்ட் சில நொடிகளில் தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றார். ஆனால், அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சரிந்து விழுந்தார். அங்கிருந்த சக ஜிம் பயனாளர்கள் மற்றும் அவசர உதவியாளர்கள் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும், அவர் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஜெகநாதன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே ஜெகநாதன், டிசம்பர் 21 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு விளக்கக் காணொளியை வெளியிட்டார். அந்த காணொளியில், டாக்டர் ஜெகநாதன் காயத்தின் உடலியல் விளைவுகளை விளக்கினார். “காயம் மார்புப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. அது உதரவிதானம், நுரையீரல் அல்லது இதயம் என எதுவாக இருந்தாலும், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறியிருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஆலோசனைகளை விளக்குவதற்காக, டாக்டர் ஜெகநாதன் தனது தனிப்பட்ட பயிற்சியாளரான பிராண்டன் ஓர்சாம் என்பவரையும் காணொளியில் இணைத்தார். அவர் உலக சாதனை படைத்த பவர் லிஃப்டர் மற்றும் லிமிட்லெஸ் பெர்ஃபாமென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
பிராண்டன், இந்த விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரு முக்கிய தொழில்நுட்பப் பிழையை சுட்டிக்காட்டினார். அது, உடற்பயிற்சி சமூகத்தில் பொதுவாக ‘தற்கொலை பிடி’ (Suicide Grip) என்று அழைக்கப்படும் திறந்த பிடி முறை. “சிலர் கட்டைவிரலை பார்பெல்லின் வெளிப்புறத்தில் வைப்பார்கள். வீடியோவில் உள்ள அந்த நபரும் அதையே செய்துள்ளார்,” என்று அவர் விளக்கினார்.
இந்த பிடி முறையில், கட்டைவிரல் பட்டையைச் சுற்றி பாதுகாப்பாக சுற்றப்படாமல், அதே பக்கத்தில் வைக்கப்படும். இதனால், மணிக்கட்டு சாய்ந்தாலோ அல்லது உள்ளங்கையில் வியர்வை ஏற்பட்டாலோ, பார்பெல் எளிதில் கைகளில் இருந்து நழுவும் அபாயம் அதிகரிக்கும் என பிராண்டன் எச்சரித்தார். இதேபோன்ற விபத்துகளைத் தடுக்க, டாக்டர் ஜெகநாதனும் பிராண்டனும் இரண்டு முக்கிய பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தினர்.
* பெஞ்ச் பிரஸ் போன்ற கனமான எடைகளை தூக்கும் போது, தலைப்பகுதியில் ஒரு நபர் நிற்பது அவசர நிலையில் உடனடி பாதுகாப்பை வழங்கும்.
* பார்பெல் உள்ளங்கையின் பள்ளத்தில் உறுதியாக அமர வேண்டும். கட்டைவிரல் பட்டையைச் சுற்றி பாதுகாப்பாக சுற்றப்பட்டிருக்க வேண்டும். இது எடையை நிலைநிறுத்தி, மார்பு அல்லது கழுத்தை நோக்கி சரிவதைத் தடுக்கும்.
“இது மிகவும் எளிய விஷயம். ஆனால், உங்கள் உயிரையே காப்பாற்றக்கூடியது,” என்று பிராண்டன் தெரிவித்துள்ளார்.
Read more: EPFO 3.0 : புதிய பிஎஃப் விதிகள்! ஊழியர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்!



