நகர்ப்புற இந்தியாவில் ஏற்படும் புதிய கோவிட்-19 கிளஸ்டர் பாதிப்பு குறித்தும், யாரெல்லாம் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கோவிட்-19 இன்னும் முழுமையாக மறையவில்லை என்பதை அமைதியாக நமக்கு நினைவூட்டுகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 6,815 பேருக்கு கோவிட் பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய அலைகளில் இருந்ததை போன்று ஆபத்தான அளவில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை என்றாலும், எச்சரிக்கை உடன் இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட்-19 வேகமாக பரவுகிறதா?
டாக்டர் ப்ரீத்தி கப்ரா இதுகுறித்து பேசிய போது, “தற்போது, இந்தியாவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை, ஆனால் மாநிலங்களில் அவ்வப்போது தொற்றுகள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக நகர்ப்புற மக்களிடம் ஏற்படும் கிளஸ்டர் பாதிப்புகள் கண்காணிக்கப்படுகின்றன. லேசான அறிகுறிகளைக் கொண்ட பலர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பது மிகப்பெரிய சவால், எனவே உண்மையான தொற்று எண்கள் குறைவாகவே பதிவாகக்கூடும்.
இருப்பினும், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு விகிதங்கள் குறைவாகவே இருக்கிறது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், தடுப்பூசிகள் மற்றும் கடந்தகால தொற்றுகள் ஓரளவு பாதுகாப்பை தொடர்ந்து வழங்குகின்றன என்பதற்கான அறிகுறியாகும்.. தற்போதைய மாறுபாடுகள் லேசானதாகத் தோன்றினாலும், இந்த நபர்கள் நிமோனியா, உறைதல் கோளாறுகள் அல்லது நீண்ட கோவிட் போன்ற சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகம்” என்று அவர் தெரிவித்தார்.
யாருக்கு அதிக ஆபத்து?
மருத்துவக் கண்ணோட்டத்தில், பின்வரும் குழுக்களை சேர்ந்தவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் ப்ரீத்தி கப்ரா வலியுறுத்தினார்:
- முதியவர்கள் (குறிப்பாக 60+)
- கர்ப்பிணிப் பெண்கள்
- நீரிழிவு, இதயம் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள்
- கீமோதெரபி அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள்
- நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள்
- பருமனான நபர்கள்
- நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள் உள்ளவர்கள்
தடுப்பூசி போடாதவர்களுக்கு சிக்கலா?
டாக்டர் ப்ரீத்தி கப்ரா இதுகுறித்து பேசிய போது, “ பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது கடுமையான நோய் மற்றும் மரணத்திற்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. இருப்பினும், ஆன்டிபாடிகள் குறைந்து வருவதால் திருப்புமுனை தொற்றுகள் பொதுவானவை, ஆனால் இந்த பாதிப்புகள் பெரும்பாலும் லேசானவை என்பதால் விரைவில் குணமாகின்றன.
தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் இன்னும் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம், ஆனால் குறைந்தபட்ச அறிகுறிகளுடன் வீட்டிலேயே குணமடைவார்கள். இருப்பினும், அவர்களால் வைரஸைப் பரப்ப முடியும். ஆனால் தடுப்பூசி போடப்படாத நபர்கள் நீண்ட கால நோய்கள் ஏற்படும் அதிக ஆபத்தில் உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அவர்கள் புதிய மாறுபாடுகளுக்கு ஆளாக நேரிடும்” என்று டாக்டர் ப்ரீத்தி கப்ரா எச்சரித்தார்.
Read More : கொரோனா வைரஸ் ஏன் மீண்டும் பரவுகிறது? கவனிக்க வேண்டிய புதிய அறிகுறிகள் என்னென்ன?