விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி விசிகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றியோ திமுகவிடம் எத்தனை சீட் கேட்க வேண்டும் என்பது பற்றியோ பேச வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.. அதனால் இவற்றை எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்.. கட்சி வளர்ச்சி பற்றி மட்டும் இங்கே கருத்துகளை சொல்லுங்க” என கூறிவிட்டார்.
நிர்வாக குழு கூட்டம் முடிந்துவிட்ட நிலையில் விசிக பொதுச்செயலாளர், பொருளாளர் நியமனங்கள் குறித்து கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தீவிர ஆலோசனையில் உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெகவில் அவருக்கு தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் எம்.எல்.ஏக்கள் எஸ்எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரது பெயர்களை பரிசீலிக்கிறாராம் திருமாவளவன். அதேபோல விசிக பொருளாளர் யூசுப் மறைந்த நிலையில் அந்த பதவிக்கும் ஒருவரை தீவிரமாக யோசித்து வருகிறாராம் திருமாவளவன்.