மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, போலி செய்திகள் மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்துக் கவலை தெரிவித்தார். போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதால், அவற்றைத் தடுக்கக் கடும் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது அவசர தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இணங்க விரும்பாத சில அமைப்புகள், தவறான தகவல்களைப் பரப்புவதற்குக் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. இதனைத் தடுப்பதற்காகச் சமீபத்தில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன” என்று குறிப்பிட்டார்.
மேலும், டீப் ஃபேக் (Deep Fake) தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல் குறித்தும் அவர் கவனம் செலுத்தினார். “தவறான தகவல்களைப் பரப்பும் சமூக ஊடக தளங்கள் மற்றும் டீப் ஃபேக்-குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வலுவான சட்டங்களை உருவாக்குவதும், புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதும் தற்போது அவசர தேவையாக உள்ளது. டீப் ஃபேக்-குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றும் அவர் கூறினார்.
அதேபோல், ஊடகங்கள் மீதான புகார்கள் குறித்தும் பேசிய அமைச்சர், “எந்தவொரு தொலைக்காட்சி சேனல் அல்லது செய்தித்தாளுக்கு எதிராக வரும் புகாரையும் மத்திய அரசும், இந்தியப் பத்திரிகை கவுன்சிலும் (PCI) மிகவும் தீவிரமாக கவனிக்கின்றன. இது நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும்” என்று தெரிவித்தார்.
“பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தவறான நோக்கத்துடன் வெளியிடப்படும் பதிவுகளைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதும், வலுப்படுத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். போலிச் செய்திகளைத் தடுப்பதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்” என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்தார்.
Read More : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி “ஓடிபி” கட்டாயம்..!! ரயில்வே அதிரடி அறிவிப்பு..!!



