நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’வை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று நியமித்தார்.
நேபாள அரசியலமைப்பின் 76வது பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெறக்கூடிய பிரதிநிதிகள் சபையின் எந்தவொரு உறுப்பினரையும், பிரதமர் பதவிக்கான கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பித்யா தேவி அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ கோரிக்கையை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் குடியரசுத் தலைவர் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில்,நேபாளத்தின் அரசியலமைப்பின் 76 வது பிரிவு 2 இன் படி பிரசண்டா பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமரின் பதவியேற்பு விழா நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரசண்டா நேபாளத்தின் பிரதமராக பதவி ஏற்பது இது மூன்றாவது முறையாகும். டிசம்பர் 11, 1954 அன்று போக்ராவுக்கு அருகிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் உள்ள திகுர்போகாரியில் பிறந்த பிரசண்டா, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மறைவாகவே இருந்தார்.
சிபிஎன்-மாவோயிஸ்ட் அமைதியான அரசியலை ஏற்றுக்கொண்டபோது, பத்தாண்டு கால ஆயுதமேந்திய கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தபோது அவர் பிரதான அரசியலில் சேர்ந்தார். 1996 முதல் 2006 வரையிலான தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை அவர் வழிநடத்தினார், இறுதியில் நவம்பர் 2006 இல் விரிவான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.