தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு போன்ற அரசின் முக்கிய நலத்திட்டங்களைப் பெறுவதற்கு குடும்ப அட்டை (Ration Card) அடிப்படை ஆவணமாக இருப்பதால், புதிய அட்டை கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மக்களின் இந்தத் தேவையைக் கருத்தில்கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவாகப் புதிய குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிலுவையில் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில், சுமார் 50 ஆயிரம் தகுதியான நபர்களுக்கு ஏற்கனவே புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறையை அரசு மிகவும் எளிமைப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே tnpds.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது கிராமப்புற மக்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் வழங்கப்படும் ‘ஒப்புகைச் சீட்டு’ (Reference Number) மூலம், கார்டு எந்த நிலையில் உள்ளது என்பதை ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களை சரிபார்ப்பார்கள்.
விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம், முகவரிச் சான்று மற்றும் அவர்கள் ஏற்கனவே வேறு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ளனரா போன்ற விவரங்கள் தீவிரமாக ஆராயப்படும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்து, தகுதி வரம்பிற்குள் வரும் பட்சத்தில் மட்டுமே புதிய அட்டை ஒப்புதல் அளிக்கப்படும். தற்போது நிலுவையில் உள்ள மற்ற விண்ணப்பங்கள் மீது விரைவான விசாரணை நடைபெற்று வருவதால், தகுதியுள்ள பொதுமக்கள் விரைவில் தங்களது புதிய ரேஷன் கார்டுகளை பெறுவார்கள் என அரசு வட்டாரங்கள் உறுதி அளித்துள்ளன.
Read More : இன்று போகிப் பண்டிகை..!! வீடுகளில் ‘காப்புக்கட்டு’ கட்டுவது ஏன்..? முன்னோர்களின் மூளையே வேற லெவல்..!!



