புதுக்கோட்டை அருகே மஞ்சு விரட்டை காண வந்த பார்வையாளரை காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் அரசு அனுமதி பெற்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்று வந்தது. இதில், ஏராளமான பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர். இந்நிலையில், சிவகங்கை புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (50) என்பவரும் மஞ்சு விரட்டை காண வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கணேசனை காளை முட்டியதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே, நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த அரவிந்த் என்ற பார்வையாளரும், காளை முட்டித் தள்ளியதில் உயிரிழந்தார். இந்நிலையில், மஞ்சுவிரட்டை காண வந்த கணேசனும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.